இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி
பருவம் :
🍁 இந்தியாவில் மேற்கு கடலோர பகுதிகளில் இஞ்சி மே மாதங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் ஏப்ரல் மாதங்களிலும், இறவைப்பயிராக சாகுபடி செய்யும்போது பிப்ரவரி மாத இடையில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பயிரிடப்பட்டு வருகிறது.
நிலத்தை தயார் செய்தல் :
🍁 இஞ்சி பயிரை சாகுபடி செய்ய பிப்ரவரி – மார்ச் மாதம் கோடைக்கால மழை கிடைத்தவுடன், நிலத்தை 4 – 5 முறை நன்றாக உழுது தயார் செய்ய வேண்டும். நிலத்தை நன்றாக கொத்தி பதமாக்க வேண்டும்.
🍁 அதற்கு பிறகு தொழு உரம் மற்றும் மண்புழு உரம் போன்றவற்றை நிலத்தில் போட்டு நிலத்தை நன்கு தயார் செய்ய வேண்டும்.
🍁 அதன்பின் 15 செ.மீ. உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் தேவையான நீளம் வைத்து பாத்திகளுக்கிடையே 40 முதல் 50 செ.மீ. இடைவெளியில் பார் அல்லது மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும்.
விதையளவு :
🍁 இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இனப்பெருக்கம் செய்து அதன் பிறகு நடவு செய்யலாம். ஒரு ஹெக்டருக்கு 1500 – 1800 கிலோ விதை இஞ்சி கரணைகள் தேவைப்படும்.
நடவு :
🍁 கோடைமழை கிடைத்தவுடனே இஞ்சி நடவு செய்ய வேண்டும். 20 – 25 கிராம் எடை மற்றும் 2.5 – 5 செ.மீ. நீளம் உள்ள கரணைத் துண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
🍁 பாத்திகளில் 50 செ.மீ. ஓ 50 செ.மீ (அ) 25 செ.மீ. ஓ 25 செ.மீ. இடைவெளி அமைத்து சிறு குழிகளில் நடுதல் வேண்டும்.
🍁 கரணைகளை நடவு செய்யும் போது அந்த கரணைகளை ஜீவாமிர்த கரைசலில் நனைத்து நடவு செய்ய வேண்டும். ஜீவாமிர்த கரைசல் வேர் அழுகல் நோயைத் தடுக்கும்.
உரமிடுதல் :
🍁 ஒரு ஹெக்டருக்கு தொழு உரம் 25 முதல் 30 டன் மற்றும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 75, 50 மற்றும் 25 கிலோ இடவேண்டும்.
🍁 முழு மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தை அடியுரமாக இடலாம். தழைச்சத்தை கரணைகளை விதைத்த 45-வது நாளிலும், மறு பாதியை சாம்பல்சத்தும் சேர்த்து 90-வது நாளிலும் மேலுரமாக இடவேண்டும்.
பூச்சிக்கட்டுப்பாடு :
🍁 பூச்சித் தாக்கத்தை அகற்ற இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலையும், செடிகளின் இலைகள் பழுப்பு நிறமாவதைத் தடுக்க கற்பூர கரைசலையும், செடிகளின் வளர்ச்சிக்கு பஞ்சகாவ்ய கரைசலையும் தள்ளித்து விடலாம்.
அறுவடை மற்றும் மகசசூல் :
🍁 இஞ்சி காய்கறிக்காக பயன்படுவதாக இருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம்.
🍁 சுக்கு (உலர்ந்த இஞ்சி) தயாரிக்க 245 முதல் 260 நாட்களில் (இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது) அறுவடை செய்யலாம்.
🍁 ஒரு ஹெக்டருக்கு 20 – 25 டன்கள் பச்சை இஞ்சி மகசூலாகக் கிடைக்கும்.